இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி, நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதிபர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அதிபர் அலுவலகம் முன் குவிந்த மக்கள் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு பகலாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு தேனீர், உணவு போன்றவை போராட்டக் களத்தில் வழங்கப்பட்டன. ஆங்காங்கே முகாம்கள் அமைத்து போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இரவிலும் நடைபெற்ற போராட்டத்தால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக அறிவித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேநேரத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துப் பேசினார். ராஜபக்ச அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி சஜித் பிரேமதாச விவாதித்ததாக கூறப்படுகிறது. இப்படி போராட்டங்கள், சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் பிரச்னைக்கான தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இலங்கை மக்கள்.
இதையும் படிக்க: சீனாவை விட இந்தியாவே அதிக உதவிகளை செய்கிறது: இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே