indian student attack
indian student attack PT
உலகம்

கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்! ரத்தம் வழிய புகைப்படம்; மீண்டும் அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்துவரும் நிலையில் , மீண்டும் ஆந்திராவை சேர்ந்த ஒரு மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் மசாஹிர் (Mazahir Ali). இவர் அமெரிக்காவின் வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சம்பவ தினத்தன்று பல்கலைக் கழகத்தில் இருந்து சையத் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். சிகாகோவில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பலத்த காயமடைந்த, ரத்த காயங்களுடன் கூடிய மாணவரின் புகைப்படமும், அடையாளம் தெரியாத நபர்கள் மாணவரை துரத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்று மாணவரின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவில் ஹைதராபாத்தில் இருந்து ஏ.என்.ஐ-க்கு அளித்துள்ள பேட்டியில், “எனது கணவர் மசஹிர் அலி மாஸ்டர் டிகிரி படிப்பதற்காக சிகாகோ சென்றார். பிப்ரவரி 4 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக காலை 6 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் எனது வீடியோ ஒன்று வந்தது. அவர் மிகவும் கடுமையாக காயம் அடைந்துள்ளார். அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகள் அங்குள்ள அரசால் அளிக்கப்படவில்லை.

எனது கணவரின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை அடைகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசை வேண்டி கேட்டுகொள்கிறேன். மேலும் என் குழந்தைகளை அழைத்து கொண்டு என் கணவரை சந்திக்க அமெரிக்கா செல்ல எமெர்ஜென்ஸி விசா வழங்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா மாணவர்கள் அமெரிக்காவில் தாக்கப்படுவது இது முதல் சம்பவம் அல்ல, இதற்கு முன்னதாக நீல் ஆசாரியா, ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர், விவேக் சைனி ஆகியோரும் மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.