உலகம்

இம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்!

webteam

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது விமானத்தில் நள்ளிரவில் நாடு திரும்பினார். நியூயார்க் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரது விமானம் இஸ்லாமாபாத்துக்குப் புறப்பட்டது. 

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சொந்தமான அந்த விமானம் கனடாவின் டொரண்டோ, வான் எல்லை யில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து நியூயார்க் விமான நிலையத்துக்கு அந்த விமானம் திரும்பியது. அங்கு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் இம்ரான் கான். விமானத்தில் கோளாறு சரிசெய்யப்பட்ட பின், அந்த விமானத்தில் அவர் பாகிஸ்தான் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.