உலகம்

’நான் ஒருத்திக்காக பிறந்தவனல்ல’ - ஒட்டிப் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த கென்ய நபர்!

Sinekadhara

ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி கிடையாது என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வவ்போது செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதேபோல் பாலிகாமி (பலதார மணம்) என்ற வார்த்தையானது புதிதல்ல. கென்யாவில் இதுபோன்ற பல விசித்திர திருமணங்கள் பற்றி பல செய்திகள் வெளிவரும் நிலையில், ஒட்டிப்பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் காஸ்பல் இசையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் கேத் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். பின்னர் கேத்தின் சகோதரிகளை சந்தித்த ஸ்டீவ், அவர்களிடம் பேசி பழகியபோது, தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தாராம். உடனே மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாகக் கூறுகிறார் ஸ்டீவோ. தொடர்ந்து, தான் பிறப்பிலேயே பாலிகாமஸாகத்தான் பிறந்ததாகவும் கூறுகிறார். மேலும், மூன்று பெண்களுடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவோ பேசுகையில், “மூன்று பெண்களின் தேவைகளை திருப்திப்படுத்துவது சாத்தியமானதா என கேட்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். மூன்று பேரையும் திருப்திப் படுத்துவதும், சமமாக நடத்துவதும் சிரமமாக இல்லை. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. மூன்று பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் கடுமையான அட்டவணையை பின்பற்றுகிறேன். வாரந்தோறும் திங்கட்கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க்கிழமைகளை கேத்திற்காகவும், புதன்கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன்” என்கிறார்.

ஆனால் அதேநேரத்தில் மூன்று சகோதரிகளும் குடும்பம் மற்றும் பிற தேவைகளை பூர்த்திசெய்வதில் அசௌகர்யமாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் தாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர அவரை அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறுகின்றனர்.