1990-2020 காலகட்டத்தில் இமயமலைப் பகுதி 12% பனியாறுகளை இழந்துள்ளது. இதனால், இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் இந்த மாற்றங்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
20ஆம் நூற்றாண்டின் இறுதியுடன் ஒப்பிடுகையில், 21ஆம் நூற்றாண்டில் இந்துகுஷ் மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள பனியாறுகள் உருகும் வேகம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மலைத்தொடர்கள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியாறுகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1990 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இமயமலைப் பகுதி தனது மொத்த பனியாறுகளின் பரப்பளவில் 12 சதவீதத்தை இழந்துவிட்டது. மேலும், 9 சதவீத உறைபனி முழுமையாகக் கரைந்துவிட்டது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பனி உருகுதல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, சிறிய பனியாறுகள் வேகமாக மறைந்துவருகின்றன. இதனால் நதிநீர் வரத்து பாதிக்கப்படுவதோடு, பனி ஏரி வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் இமயமலையைச் சார்ந்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.