உலகம்

“என் வழி தோனி வழி” - மசூத் அசாரை வீழ்த்திய சையத் பேட்டி

“என் வழி தோனி வழி” - மசூத் அசாரை வீழ்த்திய சையத் பேட்டி

webteam

தான் தோனியின் வழியை பின்பற்றி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதப் பட்டியலில் சேர்த்ததாக ஐநாவின் இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்தச் சம்பவத்தை ஜெய்ஷ் இ அகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் பாகிஸ்தானில் இருந்த அந்த அமைப்பின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே போர் வருமோ என எதிர்ப்பார்க்கப்பட்டு, பின்னர் போரின்றி பிரச்னை அடங்கியது.

இதற்கிடையே ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானம் இத்தனை நாட்கள் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க தடையாக இருந்த சீனாவின் ஒப்புதலுடன் நிறைவேறியது. அதன்படி நேற்று முன்தினம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா சபை அறிவித்தது. இந்த அறிவிப்பு முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஐநாவின் இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் ஆவார். இந்நிலையில் தான் தோனி வழியை பின்பற்றி அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்ததாக அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “நான் தோனியின் ரசிகன். அவரது கருத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் எப்போது இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என நினையுங்கள். உங்களது இலக்கை முழுமையாக அடைய நினையுங்கள். நேரம் முடிந்ததாக எப்போதும் நினைக்காதீர்கள். முன்கூட்டியே முயற்சியை கைவிடாதீர்கள் என்ற தோனியின் வழியை பின்பற்றி வென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.