உலகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை... மனைவி, மகனை கொன்று தானும் தற்கொலை..!

webteam

பிரேசிலில், முன்னாள் மனைவி உட்பட 11 பேரை சுட்டுக் கொலை செய்த கணவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள காம்பினஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 46 வயதான சிட்னி ரமிஸ் டி ஆராவ்ஜோ என்பவர் அவரது மனைவியான இசமாரா பைலியர்(41) மற்றும் மகன் ஜோவா விக்டரை(8) சுட்டுக்கொலை செய்துள்ளார்.

உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய போது துப்பாக்கியுடன் அங்கு சென்ற சிட்னி அனைவரையும் சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட பிரிவினால் ஏற்பட்ட கோபத்தில் அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர்களின் மகன் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.