உலகம்

அமேசான் நிறுவனரின் செல்போனை வாட்ஸ் அப் மூலம் ஹேக் செய்ததா சவுதி அரசு? வெளியான அதிர்ச்சி தகவல்!

அமேசான் நிறுவனரின் செல்போனை வாட்ஸ் அப் மூலம் ஹேக் செய்ததா சவுதி அரசு? வெளியான அதிர்ச்சி தகவல்!

webteam

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெஸோஸ் (JEFF BEZOS)இன் செல்போன் வாட்ஸ் அப் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் செல்போன்கள் ஹேக் செய்யப்படுகின்றன என்றும், பலர் உளவு பார்க்கப்படுகின்றனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து வாட்ஸ் அப் பயனாளர்களை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. இது உலகின் நம்பர் ஒன் பணக்காரருக்கும் விதி விலக்கில்லை. ஜெஃப் பெஸோஸ் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்; அமேசான் நிறுவனர் என்பது நாம் அறிந்தது.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் அதிபரும் இவர்தான். இது தான் அவரது போன் ஹேக் செய்யப்படக் காரணம். வாஷிங்டன் போஸ்ட் உலக அரசியல் தலைவர்களை அஞ்சாமல் விமர்சனம் செய்யும் ஒரு நாளிதழ். எனவே பல நாட்டு தலைவர்களுக்கும் ஜெஃப் பெஸோஸ் மீது கடும் கோபமுண்டு. குறிப்பாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மீது தீராதக் கோபம் உண்டு. அவரை விமர்சித்து ஏராளமான கட்டுரைகள் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகியிருக்கிறது.

முகமது பின் சல்மானை விமர்சித்து, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை எழுதி வந்தார். இந்த நிலையில் தான் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கஷோகி கொலை செய்யப்பட்டார். கஷோகி கொலைக்கும் முகமது பின் சல்மானுக்கும் நேரடி தொடர்பு உண்டு என்ற சந்தேகம் இன்றளவும் நீடிக்கிறது. இந்த நிலையில் தான் ஜெஃப் பெஸோஸின் போனை சவுதி அரசு வாட்ஸ் அப் மூலம் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஃப் பெஸோஸின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக தனியார் நிபுணர்களை கொண்டு அவர் விசாரணை நடத்தினார்.

அதில் சவுதி அரசு தான் அவரது போனை ஹேக் செய்தது என தெரிய வந்தது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இது நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முகமது பின் சல்மானுக்கு சொந்தமான எண்ணில் இருந்து ஜெப் பெஸோஸூக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பைல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலமே அவரது போன் ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வெளியான பின்னரே ஜெப் பெஸோஸை அவரது மனைவி விவாகரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் ஜெப் பெஸோஸின் போன் ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக கூறுவது அபத்தமானது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்றும் அமெரிக்காவின் அரேபிய தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.