iran war  AI
உலகம்

ஹார்முஸ் பதற்றம் | கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்.?

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு எதிராக 'ராணுவப் பயிற்சி பெற்ற' டால்பின்களை ஏவிவிட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

PT WEB

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேசமயம், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டி நிலவி வருகிறது.

hormuz

ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்க முற்றுகை தொடர்வதால், அதை எதிர்கொள்ள ஈரான் தற்போது ஒரு அசாதாரணமான மற்றும் சர்ச்சைக்குரிய தந்திரத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்களத்தில் ஆச்சரியமூட்டும் தாக்குதல்களை நடத்துவதில் ஈரான் பெயர் பெற்றது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு பரந்த முயற்சியாக இந்த அணுகுமுறை பார்க்கபடுகிறது என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

நீண்டகாலமாகத் தொடரும் இந்த முற்றுகையைத் தொடர்ந்து சகித்துக்கொள்வதை விட, மீண்டும் ஒரு மோதலில் ஈடுபடுவதே குறைவான இழப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் கருதுவதாக கூறப்படுகிறது. ராணுவப் பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்துவது குறித்து ஈரான் ஆராய்வது இது முதல் முறையல்ல. பிபிசி வெளியிட்ட தகவலின்படி 2000-ஆம் ஆண்டில் சோவியத் கடற்படையிடமிருந்து ஈரான் இத்தகைய விலங்குகளைப் பெற்றுக்கொண்டது.

USS Gerald R. Ford

அக்காலக்கட்டத்தில், தங்கள் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு இலக்குகளைத் தாக்குவதற்கும், எதிரிக் கப்பல்கள் மீது தற்கொலைத் தாக்குதல் பாணியிலான (kamikaze-style) தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அவை பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் தொடர் முற்றுகைக்கு மத்தியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்ணிவெடிகளைச் சுமந்து செல்ல பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.