உலகம்

சாலைகளில் நடந்து செல்லும்போது செல்போன் உபயோகிக்க தடை

webteam

அமெரிக்காவில் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனோலுலு நகரில் சாலைகளை கடந்து செல்லும் பாதசாரிகள் தங்களது செல்போனை பயன்படுத்த தடை வித்திக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கடந்து செல்லும்போது செல்போன்களில் மெசெஜ் செய்து கொண்டே அல்லது போன் பேசிக்கொண்டே செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதைக் குறைக்க இத்தகைய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் செல்போன்கள் பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என நகர நிர்வாக தலைவர் கிர்க் கால்டுவெல் தெரிவித்துள்ளார். முதலில் அபராதம் செலுத்திவிட்டு பின் தொடர்ந்து இதே தவறை செய்பவர்களுக்கு 99 டாலர்கள்  வரை அபராதம் விதிக்கவும் ஹோனோலுலு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இந்த தடைக்கு அந்நகர மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாலைகளிலும் நடைபாதைகளிலும் டிஜிட்டல் கேமரா மற்றும் செல்போன்கள் பயன்படுத்திக் கொண்டே நடந்து சென்றதால் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 11,000 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இதனால் ஏற்படும் விபத்துகளில் பலர் இறந்ததுள்ளதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரில் சாலை விபத்துகளை தவிர்க்க டிராபிக் சிக்னல்களில் செல்போன் பயன்படுத்த அந்நகர நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.