உலகம்

அலேக்காக 2 வயது குழந்தையை உயிரோடு விழுங்கிய நீர்யானை - அதுக்கப்புறம் நடந்த மேஜிக்!

JustinDurai

உகாண்டாவில் 2 வயது குழந்தையை நீர்யானை ஒன்று உயிரோடு விழுங்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவின் கட்வே கபடோரா நகரில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இகா பால் என்ற 2 வயது சிறுவன் ஒருவன், ஏரிக் கரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஏரியில் இருந்து நீர்யானை ஒன்று அச்சிறுவனை கவ்விப் பிடித்துள்ளது. தனது பெரிய தாடைகளால் அச்சிறுவனை அது விழுங்க ஆரம்பித்துள்ளது. இதனை ஏரிக்கரையில் இருந்த கிறிஸ்பாஸ் அகோன்சா என்ற நபர் பார்த்துள்ளார்.

உடனடியாக சிறுவனைக் காப்பாற்றும் நோக்கில், கையில் கிடைத்த கற்களை எல்லாம் அந்த நீர்யானை மீது தூக்கி வீசியுள்ளார் கிறிஸ்பாஸ். இதனால் பாதி விழுங்கிய சிறுவனை, அந்த நீர்யானை மீண்டும் தரையில் துப்பிவிட்டு ஏரிக்குள் ஓடிவிட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தார், உடனடியாக அச்சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அச்சிறுவன் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உகாண்டா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சிறுவனின் கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டு தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஏரிக்கரையில் நீர்யானை தாக்குதல் நடத்திய சம்பவம் இதுதான் முதல்முறை என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த சம்பவத்தை அடுத்து, ஏரிகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் போன்ற விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு அருகில் தங்கியிருப்போர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு எச்சரித்துள்ளது. பொதுவாக தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய விலங்கான நீர்யானைகள், சிறுவனை விழுங்க முயன்றது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேகொண்டு வருகின்றனர். நீர்யானைகள் அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.