அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள உலகின் மிக ஆக்டிவ்வான கிலாவியா எரிமலை மீண்டும் வெடித்து, வடதுவாரத்தில் இருந்து பாறைக்குழம்பு ஆறு போல் வழிந்தோடும் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 7 முதல் 11 வரை தொடர்ச்சியாக கசிவுகள் பதிவாக, 12ஆம் தேதி உச்சிப் பகுதியில் வெடிப்புகள் அதிகரித்ததால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆபத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
உலகிலேயே மிகவும் ஆக்டிவ்வான எரிமலைகளில் ஒன்றாக இருப்பது, கிலாவியா தான். அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் தான், இந்த எரிமலை அமைந்துள்ளது. இது உலகின் மிக தீவிரமான மற்றும் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் ஒன்றாக இருப்பதால், புவியியல் ஆய்வாளர்கள் இதனை எப்போதும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியான செயல்பாடு காரணமாக இப்பகுதியில் பலமுறை நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், இதைக் காண உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த எரிமலை வெடித்து அதனுள் இருந்து தீப்பிழம்புகள் ஆறு போல் ஓடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது, கிலாவியா எரிமலையின் வடதுவாரத்தில் குறைந்த அளவிலான பாறைக்குழம்பு கசிவுகள், வெடிப்புகள், கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கின.
இதன் காரணமாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், அந்த பகுதியை ஆபத்து எச்சரிக்கை பகுதி என்று அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 7-ல் இருந்து 11-ஆம் தேதி வரை, வடதுவாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பாறைக்குழம்புகள் வெளியேறி வழிந்தோடின. இதனால், பெரிய அளவிலான பாறைக்குழம்பு அடுத்தடுத்து பீய்ச்சி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று, எரிமலையின் உச்சிப் பகுதியில் தொடர்ந்து பாறைக்குழம்புகள் கக்கப்பட்டன.
வடதுவாரத்தில் இருந்து மீண்டும் மீண்டும் பாறைக்குழம்பு வழிந்தோடியதால், பிரம்மாண்டமான எரிமலைக் குழம்பு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற சூழல் உருவானது. இதற்கிடையே, எரிமலைக் குழிமையத்தில் இருந்து ஒளிரும் பாறைக்குழம்பு பாய்ந்தோடும் காட்சிகள், தற்போது வெளியாகியுள்ளது. இது பார்ப்போரை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இருப்பினும், இயற்கையின் இந்த கண்கவரும் காட்சியை சிலர் வர்ணித்தும் வருகின்றனர்.