உலகம்

ஆப்கன் சிறையில் தற்கொலைப் படை தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

webteam

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலதாபாத் சிறைச்சாலையில் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்துடன் புகுந்து தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 21 பேர் உயிரிழந்தனர். அதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஐஎஸ்ஐஎல் குழு தாக்குதலுக்கு பொறுப்பு  ஏற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பொதுமக்கள், சிறைக்காவலர்கள், ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்கியுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் ஞாயிறன்று பிற்பகலில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள் வரை நீடித்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலைப் பயன்படுத்தி சிறைக்கைதிகள் பலரும் தப்பித்துவிட்டதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர். நூற்றுக்கும் அதிகமான கைதிகள் பாதுகாப்புப் படையினரால் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.