Sundar Pichai, Google CEO
Sundar Pichai, Google CEO Twitter
உலகம்

ஊழியர்களை நீக்கிவிட்டு கோடிகளில் புரளும் சுந்தர் பிச்சை: 2022ல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Janani Govindhan

பொருளாதார மந்தநிலையை கணக்குக் காட்டி டெக் ஜாம்பவான்களாக இருக்கக் கூடிய ட்விட்டர், கூகுள், மெட்டா உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை தடாலடியாக வேலையை விட்டு நீக்கி ஆட்குறைப்பில் ஈடுபட்டது உலக அளவில் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியிருந்தன.

குறிப்பாக உலகளவில் பல்லாயிர கோடிக் கணக்கான மக்களால் பயன்படுத்தக் கூடிய தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவிகிதம் அதாவது கொத்தாக 12 ஆயிரம் பேரை ஒரேடியாக பணி நீக்கம் செய்து இதற்கு சம்பளத்தையும் சாக்காக கூறியதாக செய்திகள் வெளியானது ஊழியர்கள் மத்தியில் பெருமளவில் கொந்தளிக்கச் செய்திருந்தன.

சூழல் இப்படியாக இருக்க, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமாக ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கடந்த 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த விவரம் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு மொத்த சம்பளமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டிருக்கிறதாம். அதாவது இந்திய மதிப்பில் அது 1800 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை கூகுள் நிறுவனத்தின் சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட எண்ணூறு மடங்கு அதிகமாகும். இதில் 218 மில்லியன் டாலர் நிறுவனத்தின் பங்கும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுந்தர் பிச்சைக்கான ஊதிய விவரம் வெளியான நிலையில், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் ஊழியர்களிடையே ஊதிய ஏற்றத்தாழ்வும் வேலை பறிப்பும் பொதுவெளியில் மிகப்பெரிய அளவில் விவாத பொருளாகியிருக்கிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் சராசரி ஊழியர்களுக்கான நலனை கருத்தில்கொள்ளாமல், தலைமை பொறுப்பில், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அதன் பெருநிறுவன பேராசை என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் எதிர்வரும் காலத்தில் அதன் தலைமை மீதான விமர்சனங்களை காட்டமாக வெளிப்படுத்தவும் தவறாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.