Model image chat gpt
உலகம்

35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன்னீர்.. உலக ஆறுகள் குறித்து WMO அதிர்ச்சி அறிக்கை!

தூய்மையான குடிநீர் கிடைக்காததால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவி ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பகுதிகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

Prakash J

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள 'மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025' (State of Global Water Resources 2025) அறிக்கை, உலகளவில் நீர் சுழற்சியில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சீர்குலைவை விரிவாக விளக்குகிறது. 2025-ஆம் ஆண்டு உலக ஆறுகளில் நீர்வரத்து கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 ஆண்டுகளாகவே இயல்பான நீர்வரத்து கொண்ட ஆறுகளின் எண்ணிக்கை உலகளவில் மிகக் குறைந்த அளவிலேயே (34% - 38%) உள்ளது என்றும், நிலத்தடி நீர், ஏரிகள், ஆறுகள் மற்றும் பனிப்பாறைகள் உள்ளடக்கிய பூமியின் நன்னீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது என்றும் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

WMO

மேலும், 2025-ஆம் ஆண்டு தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பனிப்பாறைகள் பெருமளவில் உருகிச் சுருங்கியுள்ளன எனவும் உலகளவில் கண்காணிக்கப்படும் கிணறுகளில் மூன்றில் இரண்டு பங்கு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இயல்பான அளவை விடக் கடுமையாகச் சரிந்துள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.

மேலும், புவி வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ (El Niño) போன்ற பருவநிலை நிகழ்வுகளால் உலகளவில் மழைப்பொழிவு சீரற்றதாக மாறியுள்ளது. இதனால் தீவிர வறட்சிப் பகுதிகள் அதிகரித்து நதிகளின் நீர்வரத்து வற்றி வருகிறது. இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ஆண்டிஸ் மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருவதால், கோடைகாலத்தில் நதிகளுக்குக் கிடைக்கும் நீர் ஆதாரம் கணிசமாகக் குறைந்து வருகிறது. தொடர் வறட்சி மற்றும் அதிகப்படியான நீர் உறிஞ்சல் காரணமாகக் கண்காணிக்கப்படும் பெரும்பாலான நிலத்தடி நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாகச் சரிந்துள்ளது என விளக்கியுள்ளது.

Model image

மேலும், உலக வானிலை அமைப்பு (WMO) சுட்டிக்காட்டியுள்ளபடி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை கோடிக்கணக்கான மக்களின் சுகாதாரத்தையும், பிராந்திய அமைதியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகளவில் நீர் சார்ந்த பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80%-க்கும் அதிகமானவை இந்த இரு கண்டங்களிலேயே நிகழ்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான நீர் சார்ந்த இயற்கை பேரிடர்களில் 50%-க்கும் அதிகமானவை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 80%-க்கும் அதிகமானவை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களிலேயே நிகழ்ந்துள்ளன. தூய்மையான குடிநீர் கிடைக்காததால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவி ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பகுதிகளில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.