மேற்காசிய போர் பெட்ரோல் விலை உயர்வு வடிவில் பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சுமார் 140 நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மேற்காசிய போர் பெட்ரோல் விலை உயர்வு வடிவில் பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சுமார் 140 நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் விலை அதிகபட்சமாக மியான்மரில் 89.7% உயர்ந்துள்ளது. மலேசியாவில் 56.3%, பாகிஸ்தானில் 54.9% பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலிய உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்திலேயே பெட்ரோல் விலை 52.4% அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு 44.5% ஆக உள்ளது. இலங்கையில் 38.2%, கனடாவில் 31.9% பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் 20.9%, பிரிட்டனில் 19.2%, ஜப்பானில் 9.7% பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை சுமார் 4% அதிகரிக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் நீடித்தால் பெட்ரோல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.