உலகம்

நீச்சல் வீரரை சுற்றிவளைத்த ஆக்டோபஸ் : பதட்டமான நொடிகள்

webteam

ஆழ்கடல் உயிரினங்களை படம்பிடிக்க சென்ற நீச்சல் வீரரை மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று சுற்றிவளைத்த சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது. 

ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி ருடாஸ் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர், கடலுக்கு அடியில் வசிக்கும் ‌உயிரினங்களை படம்பிடிக்கும் பொழுதுபோக்‌கில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான கேமரா மற்றும் உரிய உபகரணங்களுடன் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரைமோர்ஸ்கி கிராய் என்ற கடலில் இறங்கி அவர் படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் அருகே வந்த மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று, தனது எட்டு கைகளால், அவரை சுற்றிவளைத்தபடி தாக்க முற்பட்டது. 

இதில் அவரது கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் சேதம் அடையும் நிலைக்கு சென்றதால், ஆபத்தான சூழல் உருவானது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த டிமிட்ரி, சாதுர்யமாக செய‌ல்பட்டு, ஆக்டோபஸின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். எனினும், அவரை செல்லவிடாத வகையில், கேமராவை ஆக்டோபஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், கேமராவையும் விடுவித்துக் கொண்டு அவர் கடலின் மேல் மட்டத்துக்கு வந்தார்.