உலகம்

இஸ்ரேலில் கிடைத்த 5 லட்ச ஆண்டுகள் பழமையான யானை தந்தம்! அதிசயத்தக்க வரலாற்றுப் பின்னணி!

நிவேதா ஜெகராஜா

இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கடந்த வாரத்தில் மிகப்பழமையான தந்தமொன்றை காட்சிப்படுத்தியிருந்தனர். சுமார் அரை மில்லியன் ஆண்டுகளுக்கு பழமனையான அந்த தந்தம், வரலாற்றுக்கு முந்திய மனிதர்களின் சமூக நடமாட்டங்களுக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

சுமார் 2.6 மீட்டர் (8.5 அடி) நீளமுள்ள அது, சுமார் 150 கிலோ எடையில் இருந்திருக்கிறது. இதை உயிரியலாளர் எய்தன் மோர் என்பவர், தென்பகுதி இஸ்ரேலில் உள்ள ரேவதிம் என்ற பகுதியருகே உள்ள அகழ்வாராய்ச்சி இடத்தில் கண்டெடுத்திருக்கிறார். இந்த அகழ்வாராய்ச்சியை, இஸ்ரேல் தொல்பொருட்கள் ஆணையத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பணியின் முதன்மை இயக்குநர் ஏவி லெவி என்பவர், `இந்த தந்தத்தை மிக மிக பாதுகாப்பாக வைத்திருப்போம். இதைகொண்ட யானை, நேரான தந்தம் கொண்ட யானையாக இருந்திருக்க வேண்டும். சுமார் 4 லட்சம் வருடங்களுக்கு முன்பே அவை அழிந்துபோயிருக்குமென தெரிகிறது. தந்தத்திற்கு அடுத்ததாக, இப்பகுதியில் உள்ள விலங்குகளை வெட்டுவதற்கும் தோலுரிப்பதற்கும் உதவும் பிளண்ட் எனப்படும் கருவிகளை கண்டெடுத்துள்ளோம்.

நமது வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனிதர்கள் மட்டுமன்றி யானைகளும் கூட இருந்துள்ளன. அந்த மனிதர்கள், எந்த இடத்தில் வசித்தனர் என்பது விடைதெரியா கேள்வி. ஆப்ரிகாவிலிருந்து ஆசியா, ஐரோப்பா என்று அவர்கள் பயணித்திருக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள இந்த யானையின் தந்தத்தை வைத்து பார்க்கையில், இந்த யானை 16.5 அடிக்கு, அதாவது 5 மீட்டர் உயரத்தில் இருந்திருக்குமென கணிக்கப்படுகிறது. அப்படியெனில், இன்றைய ஆப்ரிக்க யானைகளைவிட அவை உயரம் அதிகமாக இருந்துள்ளன’ என்றுள்ளார்.

மனிதர்கள் குறித்து பேசுகையில், `இங்கு மனிதர்கள் இருந்தது குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை. இப்போதைக்கு அவர்கள் உபயோகப்படுத்திவிட்டு குப்பையெலிருந்த பொருட்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன. உதாரணமாக, விலங்குகளின் எலும்புகள், பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளன' என்றுள்ளார்.