உலகம்

மனைவிக்காக கஞ்சா வளர்த்த கணவனுக்கு 8 மாதம் சிறை

மனைவிக்காக கஞ்சா வளர்த்த கணவனுக்கு 8 மாதம் சிறை

webteam

இந்தோனேசியாவின் போர்னியா தீவில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக ஃபிடல்ஸ் ஆரி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 8 மாதம் சிறை தண்டனை மற்றும் 75,000 டாலர் அபாரதம் வழங்கி சங்கயு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஃபிடல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவிக்கு வலியை குறைப்பதற்காக கஞ்சா பயன்படுத்தியதாகவும், இதற்காகவே அவர் கஞ்சா செடி வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. ஃபிடெல்ஸ் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர் மனைவி இறந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஃபிடெல்ஸின் வழக்கறிஞர் மெர்சிலினா லின் கூறுகையில், “ஃபிடெல்ஸ் கஞ்சாவை தனது சொந்த பயன்பாட்டிற்காகவோ, விற்பனை செய்வதற்காகவோ வளர்க்கவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கவே வளர்த்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர் தனக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்” என்று கூறினார்.

ஃபிடெல்ஸ்க்கு அளித்த தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மனைவி மீது உள்ள அன்பால்தான் அவர் கஞ்சா செடி வளர்த்தார். அவருக்கு சிறை தண்டனை கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுட அதிகாரிகளுக்கு அதிபர் ஜோகோ விடோடோ சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.