உலகம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்

webteam

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ஐஎஸ் பயங்கரவாதியை காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தால் பாரிஸ் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

பாரிஸில் வார விடுமுறைக்காக பொதுமக்கள் சிலர் கேளிக்கை விடுதிகளில் குவியத் தொடங்கி இருந்தனர். அப்போது நகருக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குமிங்கும் அலறியடித்தபடி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 

விசாரணையில் அந்த நபர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என தெரியவந்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பாரிஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும், ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.