உலகம்

பிரான்ஸ்: இங்கிலீஷ் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து - அகதிகள் 31 பேர் உயிரிழப்பு

Veeramani

பிரான்சின் இங்கிலீஷ் கால்வாயில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸூற்கு குடிபெயர வந்த அகதிகள் படகு கவிழ்ந்து அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் தெரிவித்துள்ளார். அந்த படகில் 34 பேர் பயணம் செய்த நிலையில், இரண்டு பேர் மட்டுமே தற்போது உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இங்கிலீஷ் கால்வாயில் மூழ்கி 31 பேரின் சடலம் மீட்கப்பட்டு, ஒருவரை தேடும் பணம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இங்கிலீஷ் கால்வாயில் மூழ்கி அகதிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இங்கிலீஷ் கால்வாய் வழியாக அகதிகள் அதிக அளவில் வருவதை தடுக்க பிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள், பிரான்ஸ் வழியாக இங்கிலீஷ் கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பணத்திற்காக மிக ஆபத்தான வகையில் அகதிகளை ஏற்றி வந்த படகு நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இங்கிலீஷ் கால்வாயில், அவர்களை தடுக்க பிரான்ஸ் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரிட்டனும், தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரான்ஸூம் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.