“பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் நேரத்தை வீணடிப்பவர்கள் என்பதைத் தவிர வேறில்லை” என்று சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹரி கௌசிகன் தெரிவித்திருப்பது அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“இஸ்லாமாபாத்தின் பெரும்பாலான பிரச்னைகள் அதன் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளிலிருந்து உருவாகின்றன” என பாகிஸ்தானிய பத்திரிகையாளர் கூறியிருந்தார். இதுதொடர்பாக உலகளாவிய மாநாட்டு ஒன்றில் பேசிய சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹரி கௌசிகன், “பாகிஸ்தானின் நெருக்கடியானது அதன் தலைவர்கள் மற்றும் இராணுவத்தின் தவறான நிர்வாகத்தால் பெருமளவில் அதுவே ஏற்படுத்திக்கொண்டது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “எல்லாவற்றிற்கும் இருப்பிடத்தைக் காரணம் காட்ட முடியாது. அது ஒரு சாக்குப்போக்கு. பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே மிக மோசமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் அரசியல்வாதிகள், கட்சிப் பேதமின்றி அனைவரும், நேரத்தை வீணடிப்பவர்கள். மேலும், இந்தப் பிரச்னைக்கு ராணுவமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றவர், அதற்காக ஓர் உதாரணம் ஒன்றையும் குறிப்பிட்டார்.
“1991ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, நான்கு பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அந்த விமானம், 114 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்களுடன் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர், அந்தப் பயணிகள் 4 பயங்கரவாதிகளால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் விமானத்தின் மீது மதுவை ஊற்றி, அதற்குத் தீ வைத்துவிடுவதாகவும் மிரட்டினர். பின்னர் வெளியான பல அறிக்கைகள், கடத்தல்காரர்கள் பூட்டோவின் சொந்தக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் (PPP) சேர்ந்தவர்கள் என்று கூறின.
அப்போது சிங்கப்பூரின் வெளியுறவுச் சேவையில் பணியாற்றி வந்த தன்னிடம், விமானக் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிகாரத்தில் இல்லாத பெனாசீர் பூட்டோவுடன் பேச அவர்கள் விரும்பினார்கள் என்பதைத் தவிர, அவர்களின் கோரிக்கை என்னவென்று எங்களுக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. இதையடுத்து, அவருடன் தொடர்புகொள்ள முயற்சிப்பது என் கடமையாக இருந்தது. தொடர்ந்து அவர் வீட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டவரிடம் விஷயத்தைக் கூறினேன். ஆனால், அவரோ, ‘அம்மையார் உறங்கிக் கொண்டிருக்கிறார், அவரைத் தொந்தரவு செய்ய முடியாது’ என்று கூறி, அடுத்த வினாடியே அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்” என அவர் நினைவூட்டினார்.