இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேரை காணவில்லை. 20 ஆயிரம் பேர் உயிர் தப்புவதற்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் 60 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனத்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இலங்கையில் மழை, வெள்ளத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கப்பல் இன்று காலையும் இன்னொரு கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் தகவலில் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.