உலகம்

நேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

webteam

நேபாள நாட்டில் நின்ற ஹெலிகாப்டர்கள் மீது சிறிய ரக விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

நேபாள நாட்டின் சொலுகும்பு (Solukhumbu) மாவட்டத்தில் அமைந்துள்ளது லுக்லா விமான நிலையம். மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறிய விமான நிலையமான இங்கு, சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இமயமலையின் அழகைச் சுற்றிக் காண்பிக்கும். இதற்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் வருவது வழக்கம். குறுகிய ரன்வே-யை கொண்டுள்ள இது, உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றென கருதப்படுகிறது. 

இங்கு சிறிய ரக விமானம் ஒன்று, விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில் விமானி ரோகல்யா, துணை விமானி துங்கனா, விமானப் பணிப்பெண் ஒருவர் இருந்தனர். போலீஸ் அதிகாரிகள் சிலர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரின் பக்கம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென்று நிலைதடுமாறிய அந்த விமானம், அங்கு நின்றிருந்த ஹெலிகாப்டர்கள் மீது மோதியது. இதில், விமானம் கடுமையாகச் சேதமடைந்தது. சிறிய ரக விமானத்தில் இருந்த துணை விமானி துங்கனா, வெளியே நின்று கொண்டிருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் அருகே நின்று கொண்டிருந்த சேட் குருங்க், பாதுகாப்பு அதிகாரி, ஒரு விமானப்பணிப்பெண் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மண்ட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.