உலகம்

ஈராக்: கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 82 நோயாளிகள் உயிரிழப்பு

JustinDurai

ஈராக் தலைநகர் பாக்தாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 நோயாளிகள் உடல் கருகி பலியானதுடன், 110 பேர் காயமடைந்தனர்.

மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் உள்ள இப்-அல்-காதிப் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள் இல்லாததால் தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. மருத்துவமனையின் இரண்டாம் தளம் முழுதும் தீ வேகமாக பரவியதை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்த நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர். அவர்கள் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், தீ விபத்தில் 82 நோயாளிகள் பலியானதுடன் 110 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பலியானவர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பிற்கு 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை பெற்றவர்கள். விபத்து குறித்து அறிந்த ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, நிவாரண பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டார். 

இதனைத்தொடர்ந்து பாக்தாத் சுகாதாரத்துறை இயக்குனர் ஜெனரல், மருத்துவமனை இயக்குனர், அதன் இன்ஜினியரிங் மற்றும் பராமரிப்பு பிரிவு இயக்குனர் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.