உலகம்

மத நம்பிக்கையால் நிகழ்ந்த கொடூரம் - ஆசிரியையை கொலை செய்த மாணவர்கள்

webteam

பாகிஸ்தானில் இஸ்லாமிய கடவுளை அவமதித்ததால் நபிகள் நாயகம் உத்தரவிட்டதாக கூறி ஆசிரியை ஒருவரை சக ஆசிரியை, மாணவர்களால் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் - பக்துவா மாகாணத்தில் டீரா இஸ்மாயில் கான் பகுதியில் ஜாமியா இஸ்லாமியா ஃபலஹுல் பினெட் என்ற இஸ்லாமிய மதப் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சொஃபரா பிபி. அவர் நேற்று பள்ளியில் பணியை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பள்ளிக்கூட வாசல் அருகே நடந்து சென்ற சொஃபரா பிபியை அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்த பெண்ணும், இரு மாணவிகளும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த 3 பேரும் பிபியை தரையில் தள்ளி தாங்கள் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாக்கினர். பின்னர், 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பிபியை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தனர். பள்ளிக்கூட வாசலிலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார் பிபி.

இதனையடுத்து, பிபியை கழுத்தறுத்து கொலை செய்த சக ஆசிரியை, 2 மாணவிகள் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிகளின் உறவினரான 13 வயது சிறுமி தனது கனவில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் தோன்றியதாகவும், அவர் ஆசிரியை பிபி (கொல்லப்பட்ட ஆசிரியை) தனக்கு எதிராகவும் (நபிகள் நாயகம்) , இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் நபிகள் கூறியதாக தெரிவித்தார்.

இதனால் அவரை கொலை செய்யும்படி நபிகள் நாயகம் உத்தரவிட்டதாக அந்த சிறுமி தனது உறவினர்களான மாணவிகள், ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் பேச்சை கேட்ட சிறுமியின் உறவினர்களாக இரு மாணவிகளும், மதப்பள்ளியில் ஆசிரியையும் சக ஆசிரியையான பிபியை கழுத்தறுத்து கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதப்பள்ளி ஆசிரியை சக ஆசிரியை மற்றும் மாணவிகளால் பள்ளிக்கூட வாசலிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.