டிரம்ப் - வெள்ளை மாளிகை web
உலகம்

"அதிபர்ன்னா எல்லாம் பண்ணிட முடியுமா..?" டிரம்பை அதிரவைத்த தீர்ப்பு.. அதிரடி காட்டிய நீதிபதி!

அமெரிக்க அதிபர்னா என்ன வேணா பண்ணிட முடியுமா? வெள்ளை மாளிகை என்ன உங்க சொந்த வீடா? - இப்படி ஒரு அதிரடி கேள்வியோட, அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரம்மாண்ட கனவுத் திட்டத்திற்கு அதிரடியாகத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க நீதிமன்றம். என்ன நடந்தது பார்க்கலாம்.

PT WEB

வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு பகுதியை இடித்து, 3,700 கோடி ரூபாய் செலவில் 1,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட விழா அரங்கம் கட்ட டிரம்ப் திட்டமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேஷனல் டிரஸ்ட் வழக்கில், நீதிபதி ரிச்சர்ட் லியோன் அதிபர் வெள்ளை மாளிகையின் உரிமையாளர் அல்ல, பாதுகாவலர் மட்டுமே எனக் கூறி, நாடாளுமன்ற அனுமதி இன்றி கட்டுமானத்திற்கு தடை விதித்தார்.

செய்தியாளர் - இனியா

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு பகுதியை (East Wing) இடித்துவிட்டு, அங்கு சுமார் 3,700 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமான விழா அரங்கம் (Ballroom) கட்ட டிரம்ப் திட்டமிட்டிருந்தார். சுமார் 1,000 பேர் அமரக்கூடிய வகையில், உலகிலேயே மிகச்சிறந்த ஒரு கட்டிடமாக இதை உருவாக்க வேண்டும் என்பதுதான் டிரம்பின் மாஸ்டர் பிளான்.

இதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க பெடரல் நீதிமன்றம் (Federal Court) இதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அமைப்பான நேஷனல் டிரஸ்ட் (National Trust for Historic Preservation) தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் லியோன் (Richard Leon), மிகக் காட்டமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

'அதிபர் என்பவர் வெள்ளை மாளிகையின் ஒரு பாதுகாவலர் மட்டுமே, அவர் அதன் உரிமையாளர் அல்ல' என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி இல்லாமல் இத்தகைய கட்டுமானங்களைச் செய்ய அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

பைத்தியக்காரர்கள் என விமர்சித்த டிரம்ப்..

இந்தத் தீர்ப்பால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், வழக்குத் தொடர்ந்த அமைப்பினரை 'தீவிர இடதுசாரி பைத்தியக்காரர்கள்' (Radical Left Group of Lunatics) என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 'இந்தத் திட்டம் அரசாங்கப் பணத்தில் இல்லாமல், முற்றிலும் தனியார் நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை' என்பதுதான் டிரம்பின் வாதம்.

ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் (Oval Office) தங்க அலங்காரங்கள் செய்தும், ரோஜா தோட்டத்தைப் புதுப்பித்தும் தனது முத்திரையைப் பதித்துள்ள டிரம்ப், இந்த அரங்கத்தை 2025-ல் தான் மீண்டும் பதவிக்கு வந்ததற்கான ஒரு முக்கிய அடையாளமாகப் பார்த்தார்.

டிரம்ப், வெள்ளை மாளிகை

தற்போது நீதிமன்றம் தனது உத்தரவை மேல்முறையீடு செய்ய டிரம்பிற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது. அதுவரை பணிகளைத் தொடரக் கூடாது என உத்தரவிடப்பட்டாலும், பாதுகாப்பு தொடர்பான நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் பதுங்கு குழி பணிகளுக்கு மட்டும் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையைத் தனது விருப்பப்படி மாற்ற நினைத்த டிரம்பிற்கு, இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய சட்டப் போராட்டமாக மாறியிருக்கிறது.