ஜான்வி கந்துல்லா ட்விட்டர்
உலகம்

அமெரிக்க போலீஸ் வேகமாக கார் ஓட்டி விபத்து.. இந்திய மாணவி மரணம்.. ரூ.262 கோடி இழப்பீடு!

அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, மரணத்துக்கு ஆளான இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜான்வி கந்துல்லா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தீர்க்க, அந்நாட்டு அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 262 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் .

Prakash J

அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, மரணத்துக்கு ஆளான இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜான்வி கந்துல்லா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தீர்க்க, அந்நாட்டு அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 262 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் .

2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது நிறைந்த இந்தியா வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்தும் ஜான்வி மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் பாடி கேமராவிலேயே பதிவாகி இருந்தது. ’இறந்த பெண் ஒரு சாதாரணமானவர்தான். பெரும் மதிப்பு மிக்கவர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகி இருந்தது.

ஜான்வி கந்துல்லா

மேலும் அதில், ‘மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஜான்வி மீது கெவின் டேவ் மோதினார். ஆனால், கெவின் வேகமாகச் சென்றதால் அவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசியிருந்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டது. இதற்கிடையே, ஜான்வி கந்துல்லாவின் குடும்பத்தினர் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், வழக்கைத் தீர்ப்பதற்காக சியாட்டிலில் உள்ள அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 262 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதில், 20 மில்லியன் அமெரிக்க டாலர் நகரத்தின் காப்பீட்டால் ஈடுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.