கண்மூடி கண் திறப்பதற்குள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நேபாளமே காணாமல் போய்க் கிடக்கிறது. இதற்கிடையே சுற்றுச்சூழல், காலநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்கள் அடுத்த எச்சரிக்கையைக் கொடுத்துவருகின்றனர். அப்படியான சூழலில் திபெத் பகுதியில் மிகப்பெரிய அணையைக் கட்டிவரும் சீனாவுக்கும் அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
நேபாளத்தில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தின் தாக்கம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், அண்டை நாடான சீனா திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் மீது கட்டி வரும் 60,000 மெகாவாட் (MW) திறன் கொண்ட மெடோக் (Medog / Motuo Hydropower Station) அணை குறித்தும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய எல்லையான அருணாச்சலப் பிரதேசத்திற்கு மிக அருகில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள மெடோக் (Medog County) மாகாணத்தில், இந்த அணை கட்டப்பட்டு வருகிறது. திபெத்தில் 'யார்லுங் த்சாங்போ' (Yarlung Tsangpo) என்று அழைக்கப்படும் நதியின் மீது இது கட்டப்பட்டு வருகிறது. இந்த நதியே, இந்தியாவில் நுழைந்து பிரம்மபுத்திராவாக மாறுகிறது.
தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாக உள்ள சீனாவின் 'த்ரீ கார்ஜஸ்' (Three Gorges Dam) அணையைவிட சுமார் மூன்று மடங்கு அதிக மின் உற்பத்திக் திறன் கொண்டதாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மின் உற்பத்தித் திறன் 60,000 மெகாவாட் ஆகும். இதன்மதிப்பு தோராயமாக 137 முதல் 148 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது, 2033-க்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இப்பகுதியில் நிகழும் நிலநடுக்கங்கள் அல்லது பனிப்பாறைகளின் சரிவு காரணமாக (Glacial Collapse) மிகப்பெரிய அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக, சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்டதைப் போன்ற பேரிடர்கள் திபெத்தின் இமயமலைப் பகுதியில் நிகழ்ந்தால், இந்த மெடோக் அணையும் downstream எனப்படும் கீழ்நீரோடைப் பகுதிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இதன் அடியில் 'பெய்ஜென் ஃபால்ட்' (Paizhen Fault) எனப்படும் தீவிர பூகம்ப பிளவு கோடு இருப்பதாக சீன நிலவியல் ஆய்வாளர்களே எச்சரித்துள்ளனர். இத்தகைய சூழலில், நேபாளப் பேரழிவுகள் மற்றும் இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, சீனாவின் இந்த பிரம்மாண்ட மெடோக் அணைத் திட்டம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.