உலகம்

இம்ரான் கானை கைது செய்ய தீவிரம்.. வன்முறையில் ஆதரவாளர்கள்! பாகிஸ்தானில் பரபரப்பு

JustinDurai

இம்ரான் கானை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே வன்முறை வெடித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வதற்காக அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேரணி ஒன்றில் பாகிஸ்தான் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதித்துறையில் தீவிரவாதிகளை கொண்டு வருவேன் என்று கூறி இம்ரான் கான் மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. இதில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான் கான் விலக்கு கேட்டு இருந்தார். அவருக்கு விலக்கு கொடுக்கப்படாத போதும் கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான் கானை  ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இம்ரான் கான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத் போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர். ஹெலிகாப்டரில் அவரின் வீட்டிற்கு அருகே இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். சிறப்பு போலீஸ் படையை இறக்கி அவரின் வீடு இருக்கும் சாமன் பார்க்கில் சென்று போலீசார் இம்ரான் கானை கைது செய்ய உள்ளனர். இதையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இம்ரான் கானின் கட்சித் தொண்டர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் கல்வீச்சு, தடியடி போன்ற சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்ட பிறகு இன்று இரவுக்குள் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.