உலகம்

'அது வேற கதை!' - விமர்சித்த ட்விட்டரின் பங்குகளையே வாங்கிய எலான் மஸ்க்

'அது வேற கதை!' - விமர்சித்த ட்விட்டரின் பங்குகளையே வாங்கிய எலான் மஸ்க்

webteam

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார். இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை  எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகள் இவர் வசமாகி உள்ளன.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில், இந்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 289 கோடி டாலர் என கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் குறித்து எலான் மஸ்க் விமர்சனம் செய்திருந்தார். தவிர சொந்தமாக சமூகவலைதளம் ஒன்றினை உருவாக்கும் திட்டம் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த பங்குகளை எலான் மஸ்க் வாங்கி இருக்கிறார்.

இதன் காரணமாக திங்கள் கிழமை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பாக, 25 சதவிகிதம் அளவுக்கு பங்குகளின் ஏற்றம் இருந்தது. எலான் மஸ்கினை 8 கோடி நபர்கள் ட்விட்டரில் பின் தொடர்கின்றனர். இந்த முதலீடு மூலம், ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக உருவாகி இருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சே வசம் 2.25 சதவிகிதப் பங்குகள் மட்டுமே உள்ள நிலையில், அவரை விட நான்கு மடங்கு அளவுக்கு கூடுதல் பங்குகளை வைத்திருக்கிறார் எலான் மஸ்க்.