21-ம் நூற்றாண்டில் உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. சமீப காலமாக அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருவது மாபெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக இந்த காலமாற்றத்தில் பசிபிக் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகப்பெரும் பெருங்கடலான பசிபிக் பெருக்கடல், கிட்டத்தட்ட உலகின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. அதாவது உலகில் உள்ள மொத்த கண்டங்களையும் பசிபிக் கடலில் வைத்தாலும் பசிபிக் பெருங்கடலில் ரஷ்யா அளவு பகுதி எஞ்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உலகின் காலநிலையை தீர்மானிக்கும் முக்கிய பங்கை இந்த பசிபிக் பெருங்கடல் வகிக்கிறது. அங்கு நேரும் சிறுமாற்றம் கூட உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், பசிபிக் பெருங்கடலின் மேல்பகுதி வெப்பம் சராசரி அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே அது பல்வேறு நாடுகளின் வானிலைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த விளைவே எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.
எல் நினோவால் ஏற்படும் பாதிப்பு என்ன ?
எல் நினோ விளைவு காரணமாக ஒரு நாட்டில் வழக்கத்துக்கு மாறாக அதிக கனமழையோ அல்லது கடும் வறட்சியோ ஏற்படுகிறது. அதாவது ஆப்பிரிக்க நாடுகளில் மழையே பெய்யாமல் வறட்சி ஏற்பட்டால், தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் கனமழை பெய்து வெள்ளம், நிலச்சரிவால் பேரழிவு ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால் கடலில் ஏற்படும் சாதாரண காற்றழுத்த தாழ்வு நிலைகள் கூட மிக எளிதாக புயல்களாக உருவெடுக்கின்றன. மேலும் புயல்கள் நீண்ட நேரம் கடலில் தங்கி தீவிர புயலாகவும், மிகவும் தீவிர புயலாகவும் மாறி கடற்கரை பகுதிகளை மிக வலிமையாக தாக்குகின்றன.
இது தவிர துருவப்பகுதிகளில் கூட இந்த வெப்பத்தின் தாக்குதலால் பனி உருகுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகளாவிய கடல்மட்டம் உயர்வடைந்து பல்வேறு தீவு நாடுகளும், கடற்கரை பகுதிகளும் கடலால் சூழப்படும் அபாயமும் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த கால மாற்றத்தால் குளிர் பிரதேச நாடுகள் என அறியப்படும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட தீவிர வெப்பம் பதிவாகி வருவதோடு, சில பகுதிகளில் குறிப்பாக ரஷ்யாவின் வடக்கு பகுதி, அமெரிக்காவின் வடக்கு பகுதிகளில் வழக்கத்தை விட அதீத பனிப்பொழிவும் பதிவாகி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இப்படி உலகில் உள்ள அனைவரையும் இந்த எல் நினோ விளைவு பாதித்து வருகிறது.
எல் நினோ விளைவை தடுப்பது எப்படி ?
பூமி உருவான காலத்தில் இருந்து காலமாற்றங்கள் சகஜமானது என்றாலும், இப்போது மனித தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த காலநிலை மாற்றம் மிக குறைவான காலத்தில் பூமியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் 19-ம் நூற்றாண்டில் உருவான தொழில்புரட்சி காரணமாக அப்போதில் இருந்து தற்போது வரை மிக குறுகிய காலத்தில் பூமியின் சராசரி வெப்பநிலை சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவு உயர்ந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த ஐ.நா தலைமையில் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகாது. காடுகளை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல், தனி வாகனங்களின் பங்களிப்பை குறைத்து பொது போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துதல், அதிகளவில் வெப்பத்தை வெளியேறும் மின் பொருள்களை தவிர்த்தல் அல்லது குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றினாலே உலக வெப்ப மயமாதலில் பெரும்பங்கை கட்டுப்படுத்தலாம் என ஐ.நாவின் சுற்றுசூழல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.