பிரான்ஸில் நடைபெற்ற ஒரு கோவில் திறப்பு விழாவிற்காக சென்ற, இந்து மத அமைப்பான போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)-ஐ சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரை பார்வையிட்டுள்ளனர். அப்போது, அந்தக் குழுவினர் பெண்களுடன் தொடர்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் ஈபிள் டவர் நிர்வாகத்திடம் ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சில பெண் ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து சிறிது நேரம் விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான், இந்த சம்பவம் பெண் ஊழியர்களிடையே கடும் அதிருப்தியையும், அவமதிக்கப்பட்டதாக உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், ஈபிள் டவர் தற்காலிமாக மூடப்பட்டது. இதனிடையே, ஈபிள் டவரை நிர்வகிக்கும் SETE நிறுவனம், பெண்களுடனான தொடர்பை குறைக்க வேண்டும் என்ற இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், அது நிறுவனத்தின் மதிப்புகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான சமத்துவக் கொள்கைக்கும் எதிரானது என்றும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகுவார் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அரசியல் தலைவர்களும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான சமத்துவம் எந்த சூழலிலும் சமரசம் செய்ய முடியாத கொள்கை எனக் கூறி, சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்ட ஈபிள் கோபுரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் BAPS அமைப்பு, ஈபிள் டவர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்தே இந்த தனிப்பட்ட பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணம் திட்டமிடப்பட்டதாகவும், எவருக்கேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்குத் தங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட முந்தைய நாள் தான், பிரான்ஸின் முதலாவது பெரிய சுவாமிநாராயண் திருக்கோயில் பாரிஸில் பிரதமர் மோடியால் இணைய வழியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே இந்து அமைப்பினர் பிரான்ஸ் சென்றது குறிப்பிடத்தக்கது.