உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்... அந்தமானில் கடும் அச்சத்தில் மக்கள்

நிவேதா ஜெகராஜா

அந்தமான் கடற்பரப்பில் நேற்று மதியம் முதல் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.

இன்று காலை 5:57க்கு ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் அந்தமான் கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 2 மணியில் இருந்து தற்போது வரை 21 நிலநடுக்கங்கள் அந்தமான் கடல் பகுதியில் பதிவாகியுள்ளது. இது அந்தமான் மற்றும் மியான்மர் பகுதியில் வாழும் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 4 முதல் 5 வரையிலிலான அளவுகளில் 21 முறை கடலுக்கு அடியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் தான் தேசிய நிலநடுக்கவியல் மையம் `அந்தமான் கடற்பகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது’ என தகவல் தெரிவித்திருந்தது. அதற்கு பின்னர் மட்டும், தற்போதுவரை சுமார் 21 முறை கடலுக்கு அடியில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 4.6, 4.7, 4.4, 4.6 என்கின்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் என்பதால், எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் உள்ளது.

ஜூலை 1 - 4க்கு உட்பட்ட காலத்தில் மட்டும் அந்தமான் பகுதிகளில் மட்டும் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் நேற்று மதியம் தொடங்கி இப்போது வரை சுமார் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மூன்று முறை கர்நாடகா பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.