நெதர்லாந்தில் ஹேக் என்ற நகரில் 33 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவரிடமிருந்து சில கோடாரிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் நெதர்லாந்து நாட்டின் பட்டத்து இளவரசியான காதரினா அமாலியா பெயரும், ஜெர்மனியின் நாசி கட்சி வாசகங்களும் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் பல்வேறு தகவல்களும் வெளியாகின.
அதில், இளவரசி காதரினா அமாலியா மற்றும் அவரின் தங்கை அலெக்ஸியா ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதோடு அவரிடம் இருந்த ஒரு கையெழுத்துக் குறிப்பில் அமாலியா, அலெக்ஸியா மற்றும் இரத்தக் களரி (Bloodbath) ஆகிய வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட நபர் பிப்ரவரி மாதமே பிடிபட்டிருந்தாலும், மே மாதத்தில்தான் அதன் முழுமையான விவரங்கள் மற்றும் இரத்தக் களரி சதித்திட்டம் தொடர்பான ஆவணங்கள் பொதுவெளிக்கு வந்துள்ளன. இது தொடர்பான விசாரணை மே 4 அன்று நெதர்லாந்து நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தீவிர வலதுசாரி மற்றும் ஹிட்லரின் நாஜி சிந்தனைகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று நெதர்லாந்து ஊடகங்கள் கூறியுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் பலர் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் இளவரசி காதரினா கடந்த 2022-ம் ஆண்டு ஸ்பெயினில் படித்து வந்தபோது மாஃபியா கும்பல்கள் அவரை கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் தனது கல்லூரி விடுதியை விட்டு வெளியேறி, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ரகசியமாகத் தங்கிப் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.