உலகம்

போதையில் போலீஸ்காரருக்கு அடி, கடி: ரஷ்ய டூரிஸ்ட்டுக்கு துபாயில் சிறை!

webteam

துபாயை சுற்றிப்பார்க்க வந்த ரஷ்ய பெண், போதையில் போலீஸ்காரரை அடித்து, உதைத்து கடித்தார். அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்-க்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுவருவது வாடிக்கை. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய பெண் ஒருவர் தனது குழுவுடன் சுற்றுலா வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். அங்குள்ள பாருக்கு சென்ற அவர், போதையில் இன்னொரு சுற்றுலாப் பயணியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். அடிதடியிலும் இறங்கினார். இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை விசாரிப்பதற்காக வெளியே அழைத்து வந்தனர். வரமாட்டேன் என்று அடம் பிடித்த அவர், போலீஸ்காரை அடித்து, கழுத்து, கன்னம் எனக் கடித்தார். போலீஸ் வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்தார். இதையடுத்து போலீசார் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய ரஷ்ய பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.