ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இணைப்பை பாதியில் துண்டித்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான அகதிகள் தொடர்பான உடன்பாடு கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஒபாமா காலத்தில் கையெழுத்தான உடன்பாட்டின்படி, ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய சுமார் 1250 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தனர். ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல், அகதிகளை ஏற்பது குறித்து விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அகதிகளை ஏற்பது, இன்னொரு பாஸ்டன் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்குச் சமம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து காரசாரமாக மாறியதாகவும், 25-ஆவது நிமிடத்தில் தொலைபேசி இணைப்பை ட்ரம்ப் துண்டித்துவிட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் குறிப்பிட்டுள்ளது. திட்டமிட்டபடி உரையாடல் நீடித்திருந்தால், சுமார் ஒருமணி நேரம் வரை இரு தலைவர்களும் பேசியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.