உலகம்

நடுரோட்டில் மனித தலையை கவ்விக்கொண்டு ஓடிய நாய்.. மெக்சிகோவில் நடந்த பயங்கரம்!

JananiGovindhan

வேடிக்கையான வீடியோக்களுக்கு இணையாக பல பயங்கரமான காணொலிகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக காண கிடைக்கிறது. அந்த வகையில் நடு ரோட்டில் நாய் ஒன்று மனிதனின் தலையை தனது வாயில் கவ்விய படி சுற்றித்திரிந்த சம்பவம் மெக்சிகோவில் அரங்கேறியிருக்கிறது.

இது குறித்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை கதிகலங்கச் செய்திருக்கிறது. மெக்சிகோவின் வடக்கு மாவட்டமான Zacatecas என்ற பகுதியில் உள்ள சாலையில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வைரலான வீடியோவில் அந்த நாய் தள்ளாடியபடி மனித தலையை கவ்விக்கொண்டு சென்றிருக்கிறது.

தகவல் அறிந்த போலீசார் ஒருவழியாக அந்த நாயிடம் இருந்து மனித தலையை கைப்பற்றியிருக்கிறார்கள். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த மனித தலையை குற்றச் சம்பவம் நடந்த பகுதியில் இருந்துதான் நாய் கொண்டு வந்திருக்கிறது என முதற்கட்டமாக தெரிய வந்திருக்கிறது.

மேலும், மவுண்ட் எஸ்கோபெடோ என்ற பகுதியில் கடந்த புதன்கிழமையன்று இறந்த நபரின் இதர உடல் உறுப்புகள் கிடந்ததாகவும், இறந்தவர் யார் என்ற அடையாளம் தெரியாமல் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட மனித தலையை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அந்த குற்றம் திட்டமிடப்பட்ட கொலையாக இருந்திருக்கிறது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், குரேரோ பகுதியில் இரு தரப்பு கும்பலிடையே மூண்ட சண்டையில் முன்னாள் மேயர் உட்பட 18 பேர் சம்பவத்தன்று இறந்தாகவும் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோக Zacatecas மாவட்டத்தில் கடந்த சில காலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சினாலோவா மற்றும் ஜாலிஸ்கோ என்ற போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே சமீப காலமாக சண்டை இருந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.