உலகிலேயே மிகவும் சிறப்பான பணிச்சூழல் உள்ளதாகக் கருதப்படும் நிறுவனங்களில் ஒன்று கூகுள்.
பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் கூகுள் உலகிலேயே மிகவும் பிரபலமான இணையத்தில் பல சாதனைகளைப் படைத்த நிறுவனம். தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது கூகுள். கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. 2014-ஆம் ஆண்டுவரை தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனம் 2014-ஆம் ஆண்டுதான் முதன் முதலில் பங்குகளை விற்கத் தொடங்கியது.
இணையத்தில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த பல நிறுவனங்களை கூகுள் விலைக்கு வாங்கியது. யுட்யூப், பிளாக்கர், என பலவும் இப்படி வந்தவைதான். சமீபத்திய மதிப்பீட்டின்படி ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான கூகுள் வளர்ந்திருக்கிறது. கூகுள் நிறுவனத்துக்கு 40 நாடுகளில் 70 கிளைகள் இருக்கின்றன.
சுமார் 60 ஆயிரம் பேர் இவற்றில் பணியாற்றுகிறார்கள். இவர்களில் நிறுவனத்தை தொடங்கிய லேரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோரும் அடங்குவார்கள். ஆனால் 2014-ஆம் ஆண்டு பங்குவிற்பனைக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒரு டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகிறார்கள்.
கூகுளின் தற்போதைய மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவிவின் சான் ஜோஸ் நகருக்கு அருகேயுள்ள கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் பரப்பு 20 லட்சம் சதுர அடிகள். நியூயார்க்கில் உள்ள மற்றொரு அலுவலகம் இதைவிடவும் பெரியது. இவ்விரு அலுவலகங்களிலும் மிகவும் இயற்கையான பணிச் சூழல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இசை, விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் உண்டு.
நீச்சல் குளங்களும் விதவிதமான உணவகங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் காரணமாகவே உலகம் முழுவதும் உள்ள மென்பொறியாளர்கள் அதிகமாக விரும்பும் நிறுவனங்களுள் ஒன்றாக கூகுள் திகழ்கிறது. 2015-ஆம் ஆண்டில் ஆல்பபெட் என்ற பெயரில் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டு அதற்குக் கீழ் கூகுள் கொண்டு வரப்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் இணையத்தில் செயல்படும் தனி நாடு போல உருவெடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.