வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜத்ராபாரி, மாலிபாக், அக்ரகான், மொஹாகாலி, பாபுபஜார், மொக்பஜார், ராம்புரா உள்ளிட்ட 7 இடங்களில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்காவின் பல்வேறு பகுதிகளில், நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, டாக்கா நகரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு என்ன நடந்தது? என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள், டாக்காவின் ஜத்ராபாரி, மாலிபாக், அக்ரகான், மொஹாகாலி, பாபுபஜார், மொக்பஜார் மற்றும் ராம்புரா உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று பிற்பகல் 2.25 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குண்டுகள் வெடித்தாலும், ஆளில்லாத இடங்களிலும் சாலைகளிலும் பெரும்பாலும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதேசமயம், இந்த சம்பவங்களில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று இரவு 10 மணியளவில் காஃப்ருல் காவல் நிலையம் அருகே ஆளில்லாத பயணிகள் பேருந்து ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து டாக்கா மாநகர காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நகரின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக போலீஸ் ரோந்துப் பணியும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாக்காவுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முக்கியமான நான்கு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெடிப்புகள் மற்றும் பேருந்து தீவைப்பு சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது என டாக்கா காவல்துறை துணை ஆணையர் நியாஸ் மெஹ்தி (Niaz Mehedi) தெரிவித்துள்ளார்.
இந்தச்சூழலில் தான், வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்திருக்கும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.