இன்டர்போல் அமைப்பின் முன்னாள் தலைவரின் மனைவி, பிரான்ஸ் அரசிடம் தஞ்சம் கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர்போல் அமைப்பின் தலைவராக இருந்தவர், சீனாவைச் சேர்ந்த மெங்க் ஹாங்வே (Meng Hongwei). இவ்வமைப்பின் தலைமையகம் பிரான் ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது. இங்கு தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார், மெங்க். இந்நிலையில் இவர் சீனாவுக்கு சென்றபோது திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் பரபரப்பானது.
இதற்கிடையே சில நாட்கள் கழித்து, லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்தது. பின்னர் தனது மனைவிக்கு அவர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார். அதில், ’’எனது அழைப்புக்காக காத்திருக்கவும்’’ என்று கூறியிருந்தார். அதற்கு பின் அவர் பற்றிய தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்டர்போல் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய தலைவராக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங் யாங், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மெங்க்-கின் மனைவி கிரேஸ், பிரான்ஸ் அரசிடம் தஞ்சம் கோரி மனு கொடுத்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் தனது கார் மர்மநபர்களால் பின் தொடரப்படுவதாகவும் புகைப்படம் எடுக்கப்படுவதாகவும் தான் கடத்தப்படலாம் என சந்தேகிப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.
சீனாவை சேர்ந்த சிலர் தன்னைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும் மர்ம போன்கால்கள் வருவதாகவும் இதனால் தனக்கும் தன் மகன்க ளின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.