ஆப்கானிஸ்தானில் 13 வயது சிறுவன் கையால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை web
உலகம்

80,000 பேர் முன்னிலையில்.. 13 வயது சிறுவன் கையால் மரண தண்டனை..? அதிர்ச்சி வீடியோ!

விளையாட்டு மைதானத்தில் 80ஆயிரம் மக்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட மரண தண்டனையும், அது சார்ந்து வெளியான வீடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன..

விமல் ராஜ்

80 ஆயிரம் பேரும் கண்ணிமைக்காமல் ஒருவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்... அந்த இடமே மயான அமைதியில் இருந்தது... ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் செய்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

ஆப்கானிஸ்தான் நாட்டில் 13 பேரை கொலை செய்தவருக்கு 80ஆயிரம் மக்கள் முன்னிலையில் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனையை 13 வயது சிறுவன் நிறைவேற்றியதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொலைசெய்த குற்றவாளிக்கு ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தாலிபான் ஆட்சியாளர்களும் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.. இந்த செய்தியை ஆப்கனிஸ்தான் செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன..

அத்தகைய செயலுக்கு அஞ்சிய சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்தபோதும், அவரின் கையாலேயே மொத்தம் 5 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அப்போது அங்கு கூடியிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது மத முழக்கங்களை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுசார்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைக்க வைக்கின்றன.. இதற்கு உலகளவில் கடும் கண்டங்கள் எழுத் தொடங்கியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை 13 வயது சிறுவன் கையால் நிறைவேற்றப்பட்டதாகவும், அதை பல சிறுவர்கள் பார்த்துக்கொண்டிருந்ததும் ஏற்கமுடியாதது.. இது மனிதாபிமானமற்ற, கொடூரமான செயல் என்றும் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தொடர்பாளர் ரிச்சர்ட் பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..

கடந்த 2021-ல் தலிபான் ஆட்சி அமைத்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை என அந்நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது..இதற்கு முந்தைய ஆட்சியில் குற்றவாளியின் மீது மக்கள் கல்லெறிவதும், சவுக்கால் அடித்து தண்டனை வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது