அயதுல்லா அலி காமேனியின் உடல் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு ஈரானில் தொடங்கிய நிலையில், IRGC தளபதி அகமது வாஹிதி திடீரென தெஹ்ரானில் கலந்துகொண்டார். அவர் பங்கேற்ற புகைப்படங்கள் அரசு ஊடகங்களில் வெளியாகி அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்; m. மீரா
2026 பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கியதில், ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அயதுல்லா அலி காமேனி, போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். அவரது மகன் மொஜ்தபாவைத் தவிர மேலும் அவருடைய உறவினர்கள் சிலர் இதில் கொல்லப்பட்டனர். இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும், தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நடைபெற்றதால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான விழா இன்று (ஜூலை 4) ஈரானில் துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் ஜூலை 9ஆம் தேதி மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வில், கடந்த பல மாதங்களாக ரகசிய இடத்தில் தங்கியிருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) மிகச் சக்திவாய்ந்த ஜெனரலான அகமது வாஹிதி, திடீரென தலைநகர் தெஹ்ரானில் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளார். காமேனியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்ற புகைப்படங்களும், காமேனியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கு அருகில் அவர் அமர்ந்திருக்கும் காட்சிகளும் ஈரான் அரசு ஊடகங்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதன்மூலம் அகமது வாஹிதி இறந்துவிட்டதாகக் கூறி பல வாரங்களாகப் பரவி வந்த ஊகங்களுக்கும் இணைய வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அஹ்மத் வாஹிதி, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மூத்த தலைவராக விளங்குகிறார். ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவரான மொஜ்தபா காமேனியுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக வாஹிதி கருதப்படுகிறார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரின்போது, அந்நாட்டின் பல மூத்த ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்ட சூழலில், வாஹிதி 'இஸ்லாமியப் புரட்சிகரப் படைப் பிரிவின்' (IRGC) பொறுப்பை ஏற்றார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட (IRGC)) தலைமைத் தளபதி முகமது பக்பூருக்குப் (Mohammad Pakpour) பதிலாக இவர் அப்பதவிக்கு வந்தார்.
அர்ஜென்டினாவின் உள்ள AMIA யூத சமூக மையத்தில் 1994-இல் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், பல தசாப்தங்களாக இன்டர்போலால் இவர் தேடப்பட்டு வருகிறார். மேலும், இவர் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.