உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கிய இரண்டாவது நாளாக இன்று காலையிலும் தலைநகர் கீவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முழுவதும் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்று காலை குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டது. கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதன் மூலம் உக்ரைனில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசை நீக்கிவிட்டு, தனது ஆதரவு அரசை ரஷ்ய அதிபர் புடின் நிறுவ முயற்சிப்பதாக அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவை எதிர்கொள்ள உதவுமாறு உக்ரைன் அரசு கோரிவரும் நிலையில், உக்ரைனில் இருந்து ரயில்கள், கார்கள் மூலம் வெளியேற அந்நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர்.
தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய கண்டத்தில் மிகப் பெரிய போராக கருதப்படும் உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும், எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும். இதற்கிடையே, உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தனது நாட்டு மக்களை சீனா அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய செய்தி: ஒரு பக்கம் நேரடி போர், மறுபக்கம் சைபர் தாக்குதல் - ஸ்தம்பித்த உக்ரைன்