அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் ஏற்பட்ட நிலையில், இந்த போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியது. இதனால் உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் முடங்கியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என உச்சபட்ச விலையை எட்டியது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்ததால் இந்தியாவில் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்தது. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ள சூழலில், இந்தப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் போர் இதே நிலையில் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 120 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது என்ற பிரபல பொருளாதார நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் (goldman sachs) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரான் அமெரிக்கா இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் வரையில் குறைந்தது என்றும், தற்போது மீண்டும் போர் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகபட்சம் 120 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது கச்சா எண்ணெய் விலை 147 டாலர் வரை தொட்டதுபோல தற்போது அதிகரிக்காது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை அதிகரித்ததால், பல்வேறு நாடுகளும் பொருளாதாரச் சிக்கலில் தவித்து திவால் நிலைவரை சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.