BA.3.2 Cicada Virus எக்ஸ் தளம்
உலகம்

அதிவேகமாகப் பரவும் 'சிக்காடா' வைரஸ்.. அறிகுறிகள் என்ன? கொரோனா போன்று ஆபத்தானதா?

ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

Prakash J

BA.3.2 என்பது கோவிட்-19-ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஒமைக்ரானின் ஒரு கிளை வகை ஆகும். இது 2022-இன் தொடக்கத்திற்குப் பிறகு பெருமளவில் மறைந்துபோன முந்தைய BA.3 மரபுவழியிலிருந்து உருவானது. இதற்கு, 'சிக்காடா' (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தவிர, பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. அதன்பிறகே உலகம், கொரோனா எனும் கோரத் தாண்டவத்திலிருந்து மீளத் தொடங்கியது. எனினும், தற்போதும் ஒருசில நாடுகளில் திரிபுகள் பரவுவதாகவும் அதனால் பாதிப்புகள் உருவாவதாகவும் அவ்வப்போது ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

BA.3.2 Cicada Virus

இந்த நிலையில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. BA.3.2 என்பது கோவிட்-19-ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஒமைக்ரானின் ஒரு கிளை வகை ஆகும். இது 2022-இன் தொடக்கத்திற்குப் பிறகு பெருமளவில் மறைந்துபோன முந்தைய BA.3 மரபுவழியிலிருந்து உருவானது. இதற்கு, 'சிக்காடா' (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உருமாறித் தோன்றியுள்ளதால், இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் BA.3.2 எனப்படும் புதிய கோவிட்-19 துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிக்காடா வைரஸ் மற்ற வகைகளைவிட அதிகப்படியான மரபணு மாற்றங்களைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஸ்பைக் புரோட்டீனில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்களும், மூல வைரஸுடன் ஒப்பிடும்போது 70-க்கும் மேற்பட்ட மாற்றங்களும் காணப்படுகின்றன. இத்தகைய அதிகப்படியான மாற்றங்கள், தடுப்பூசி அல்லது முந்தைய தொற்றுகள் மூலம் உடலில் உருவான நோய் எதிர்ப்புச் சக்தியை இந்த வைரஸ் ஓரளவுக்கு மீறிச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, டிசம்பர் 2025-இல் உலக சுகாதார நிறுவனம் இதனை ’கண்காணிக்கப்பட வேண்டிய வகை’ என வகைப்படுத்தியுள்ளது.

BA.3.2 Cicada Virus

அதேநேரத்தில், சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ள இந்த வைரஸ், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை மீறித் தாக்கும் தன்மை கொண்டது. இருப்பினும், இது முந்தைய பாதிப்புகளைவிடக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், இது முந்தைய ஒமைக்ரான் வகைகளைவிட அதிக பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கம்போலவே கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சோர்வு மற்றும் தொண்டை வலி போன்றவையே இதற்கும் அறிகுறிகளாக உள்ளன.