உலகம்

தேடப்படும் குற்றவாளியாக ஜாகிர் நாயக் அறிவிப்பு

webteam

இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்த ஒரு ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக், கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் இந்தியா திரும்பவில்லை.

இந்நிலையில், ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு முந்தைய தினம், ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவை ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவரது சொத்துகளை முடக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.