உலகம்

''ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரி கொரோனா'' - உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

webteam

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் மிகப் பெரிய எதிரியாக உருவெடுத்துள்ளது என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா நம்மை தாக்காது என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக்கூடாது என்றும், அதேசமயம் அதை துணிவுடன் எதிர்கொள்வதற்கு மனத்திடத்துடன் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உலக நாடுகளில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் அதிகம் கூடும் விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தடை செய்வது அவசியம் என கேட்டுக் கொண்டார்.

ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக உருவெடுத்திருக்கும் கொரோனாவை ஒழிக்க, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பு மருந்து சோதனை நடத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை என்றும் டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.