உலகம்

''இவர்தான் ஹீரோ'': 2 வார குழந்தையை காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்!

webteam

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை மூச்சுத்திணறலில் சிக்கியபோது துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள உணவகத்திற்கு ஒரு பெண் தன்னுடைய 2 வார குழந்தையுடன் வந்துள்ளார். பரபரப்பாக உணவகம் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென அந்தக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை அசையாமல் இருந்துள்ளது. இதனைக் கண்ட அந்தப்பெண் செய்வதறியாமல் அலறினார்.

அப்போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போலீஸ் அதிகாரி மெலிசா கரே எனபவர் துரிதமாக செயல்பட்டு குழந்தைக்கு முதலுதவி செய்தார். உடனடியாக மூச்சுத்திணறலில் இருந்து மீண்ட குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. குழந்தையை உடனடியாக காப்பாற்றிய போலீஸ் அதிகாரியை இணையவாசிகள் 'ஹீரோ' என புகழ்ந்து வருகின்றனர்.

அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டான்வில்லி போலீசார், போலீஸ் அதிகாரி மெலிசாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய குழந்தையின் தாய், ''உணவகத்தில் மட்டும் மெலிசா இல்லை என்றால், இந்த நொடி என் குழந்தை உயிரோடு இருந்திருக்காது’’ என தெரிவித்துள்ளார்.