3 கோடி கொசு உற்பத்தி x
உலகம்

கொலம்பியா| செயற்கையாக உருவாக்கப்படும் 3 கோடி கொசுக்கள்.. என்ன காரணம்..?

கொலம்பியாவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் வாரத்திற்கு 3 கோடி ‘வோல்பாக்கியா’ பாக்டீரியா கொண்ட ஏடிஸ் கொசுக்கள் செயற்கையாக உற்பத்தி செய்து சுற்றுச்சூழலில் விடப்படுகின்றன.

PT WEB

கொலம்பியாவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் வாரத்திற்கு 3 கோடி ‘வோல்பாக்கியா’ பாக்டீரியா கொண்ட ஏடிஸ் கொசுக்கள் செயற்கையாக உற்பத்தி செய்து சுற்றுச்சூழலில் விடப்படுகின்றன.

பொதுவாக கொசுக்கள் என்றாலே நோய்களைப் பரப்பும் உயிரினங்களாகவே நாம் பார்க்கிறோம். ஆனால், கொலம்பியாவில் உள்ள ஒரு தொழிற்சாலை வாரத்திற்கு சுமார் 3 கோடி கொசுக்களை செயற்கையாக உற்பத்தி செய்து, அவற்றை வேண்டுமென்றே சுற்றுச்சூழலில் திறந்து விடுகிறது. டெங்கு, ஜிகா போன்ற உயிர்கொல்லி நோய்களைத் தடுக்கவே இந்த வினோதமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன், 'உலக கொசு திட்டம்' மூலம் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் கொசுக்கள் சாதாரணமானவை அல்ல; இவை 'வோல்பாக்கியா' என்ற ஒரு வகை பாக்டீரியாவைக் கொண்டவை. ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களின் உடலில் இந்த 'வோல்பாக்கியா' பாக்டீரியா இருக்கும்போது, அவற்றால் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற வைரஸ்களை மனிதர்களுக்குப் பரப்ப முடியாது. இவை மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் அல்ல. ஆய்வகத்தில் கொசு முட்டைகளுக்குள் இந்த பாக்டீரியா செலுத்தப்படுகிறது.

இந்த கொசுக்கள் காடுகளில் விடப்படும்போது, அங்குள்ள மற்ற சாதாரண கொசுக்களுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் மூலம் பிறக்கும் அடுத்தடுத்த தலைமுறை கொசுக்களும் 'வோல்பாக்கியா' பாக்டீரியாவுடன் பிறக்கின்றன. காலப்போக்கில் அந்தப் பகுதியில் நோயைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்து, பாதுகாப்பான கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தத் திட்டம் முதன்முதலில் 2015-ல் மெடலின் நகரில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அங்கு டெங்கு பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

File Image

இதேபோல் இந்தோனேசியாவிலும் இத்திட்டம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தக் கொசுக்கள் ஏதோ ரகசிய பரிசோதனைக்காகவும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும் விடப்படுவதாகப் பல வதந்திகள் பரவின. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இவற்றை மறுத்துள்ளனர். இது முற்றிலும் உயிரியல் ரீதியாக நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பான முறை என்றும், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று என்றும் விளக்கியுள்ளனர். கொசுக்களைக் கொண்டே கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் இந்த நவீன உயிரியல் தொழில்நுட்பம், வெப்பமண்டல நாடுகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.